செய்திகள்
நித்யானந்தா

நித்யானந்தா எங்கே இருக்கிறார்? -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்

Published On 2019-11-22 06:24 GMT   |   Update On 2019-11-22 06:25 GMT
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் தற்போது இமயமலையில் இருப்பதாகவும் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூர்:

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது புதிதாக ஒரு கடத்தல் புகார் எழுந்தது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களையும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அவரது அனுமதி இல்லாமல் 4 மகள்களையும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.

ஜனார்த்தன சர்மா அகமதாபாத் ஆசிரமத்துக்கு சென்றபோது மகள்களை காண ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஜனார்த்தன சர்மா குஜராத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆசிரமத்துக்கு சென்று ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை மீட்டனர்.

ஆனால் அவரது மூத்த மகள் லோபமுத்ரா மற்றும் நந்திதா ஆகிய இருவரும் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டனர். அவர்களை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.



இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆசிரம நிர்வாகிகளான ப்ரயான் பிரியானந்தா, பிரியதத்துவா ரித்திகிரண் என்ற 2 நிர்வாகிகளை கைது செய்தனர்.

குழந்தைகளை கடத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்துக்கு நிதி திரட்டியதாக நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் பரவியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் லோப முத்ரா, நந்திதா ஆகியோர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர்கள் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது.

எனவே நித்யானந்தாவும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என குஜராத் போலீசார் கருதுகின்றனர். நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடுள்ளார். அதில், குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடம் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது. இதனால் எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும். நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.

இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும். மேலும் அதிகம் செலவழிக்க வேண்டும். எனது சீடர்களுக்கு கடும் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் துன்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.

அந்த இடத்தில் நானும், எனது சீடர்களும் வேத ஆகம ரீதியிலான ஆன்மீக பயிற்சியில் அமைதியாக ஈடுபடுவோம்.

நான் யாருக்கும் எதிரி அல்ல. இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி உள்ளனர்.

நான் மனித உரிமைகளுக்கும், குழந்தைகள் நல உரிமைகளுக்கும் எதிரானவன் அல்ல. எனது குருகுலத்தில் அகிம்சை வழியிலான பயிற்சிகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. அங்கு எந்தவித துன்புறுத்தல்களும் நிகழவில்லை.

நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்.

பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகிறார்கள். தினசரி காலையில் சத்சங்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களை தொடர்பு கொள்கிறேன். அதை தவிர எனது சீடர்களுக்கு நான் எந்தவித தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவதில்லை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News