செய்திகள்
கணவருடன் வாக்குவாதம்: 3 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - குஜராத்தில் சோகம்
குஜராத் மாநிலத்தில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த மனைவி, தனது 3 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் மகிசகர் மாவட்டம் டிட்வாஸ் கிராமத்தை சேர்ந்த பெண் மகுபென் டமெரு (25). இவருக்கு திருமணமாகி ஐந்து, மூன்று, ஒன்றரை ஆகிய வயதுகளில் 3 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், மகுபென்னுக்கும் அவரது கணவருக்கும் இடையே இன்று திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகுபென், தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் கிராமத்தின் எல்லையோரம் அமைந்திருந்த கிணற்றின் அருகே சென்ற மகுபென் தனது மூன்று குழந்தைகளையும் தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் வீசி விட்டு தானும் அதில் குதித்தார். இதில் தண்ணீரில் மூழ்கி குழந்தைகள் உள்பட 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் பிணமாக கிடந்த மகுபென் டமெரு மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனைவி தனது 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.