செய்திகள்
ப.சிதம்பரம்

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி

Published On 2019-11-21 10:20 GMT   |   Update On 2019-11-21 13:03 GMT
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். 
  • அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் மனு மீதான விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். 
  • நாளையும் நாளை மறுதினமும் சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி.

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்ற நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தங்கள் வசம் உள்ள சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குமார், சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News