செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி வழங்குகிறாரா முகேஷ் அம்பானி?
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 500 கோடி நிதியுதவி வழங்குவதாக சமூக வலைத்தளங்கலில் தகவல் பரவுகிறது.
உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சந்திக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முகேஷ் அம்பானி ரூ. 500 கோடி நிதியுதவி வழங்குவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக வைரல் பதிவுகளில் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது தற்போது வைரலாகும் புகைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாகும். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் தற்போது எடுக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள நவம்பர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து இதுபோன்ற போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.