செய்திகள்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2019-11-20 06:33 GMT   |   Update On 2019-11-20 06:33 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
  • ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை. 
  • திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு. 
  • ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு வரும் 27-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால், அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெயித், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த 15-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். 



இதையடுத்து டெல்லி ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரியும் அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான  அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அமலாக்கத்துறை திங்கட்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News