செய்திகள்
உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து
சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மும்பை:
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில், பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு சில பாதுகாப்பு காரணங்கள் கருதி உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதும், உத்தவ் தாக்கரே தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்ததற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.