செய்திகள்
சர்ச்சைக்குள்ளான அயோத்தி நிலம்

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு

Published On 2019-11-17 10:16 GMT   |   Update On 2019-11-17 10:37 GMT
அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.
 லக்னோ:

நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாகவும் அரசிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை அயோத்திக்குட்பட்ட பகுதியில் பெறுவது தொடர்பாகவும் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.



உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் உள்ள நட்வா என்ற பகுதியில் இன்று காலை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வேறு இடத்தில் கூட்டம் நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘எங்கள் அமைப்பின் சார்பில் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்.

எங்கள் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என 100 சதவீதம் தெரியும். ஆனால், நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்தாக வேண்டும். இது எங்கள் உரிமை’ என்று குறிப்பிட்டார்.
Tags:    

Similar News