செய்திகள்
கோப்பு படம்

டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் - புதிய சட்டம் கொண்டு வருகிறது, மத்திய அரசு

Published On 2019-11-15 21:29 GMT   |   Update On 2019-11-15 21:29 GMT
பணியில் உள்ள டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.
புதுடெல்லி:

கடந்த ஜூன் மாதம், மேற்கு வங்காளத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்தார். சிகிச்சை சரியில்லாததால்தான் அவர் இறந்தார் என்று குற்றம் சாட்டி, டாக்டர்கள் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க விரிவான சட்டம் கொண்டு வருமாறு டாக்டர்கள் வலியுறுத்தினர்.

அதை ஏற்று, மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீதான வன்முறை மற்றும் சேதத்தை தடுக்கும் வரைவு மசோதாவை உருவாக்கும் பணியை 8 பேர் கொண்ட ஒரு துணை குழுவிடம் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்படைத்தது. அதில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ சங்கம், எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.

அவர்கள் உருவாக்கிய வரைவு மசோதா, கடந்த செப்டம்பர் மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்திலும் இந்த வரைவு மசோதா விவாதிக்கப்பட்டது.

இதில், ஆஸ்பத்திரியில் பணியில் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கி, பலத்த காயம் ஏற்படுத்தினால், 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதில் இழப்பீட்டுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளுக்கு சந்தை விலையை விட இரு மடங்கு தொகையும், தாக்கப்பட்டதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும் இழப்பீடு வழங்கப்படும்.

இந்த வரைவு மசோதாவை இறுதி செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. எனவே, அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனையில் பங்கேற்ற அமைச்சகங்கள், தங்கள் கருத்துகளை விரைவில் அனுப்பி வைக்குமாறும், அப்போதுதான் வரைவு மசோதாவை இறுதி செய்து, அடுத்த வாரம் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

மந்திரிசபையின் ஒப்புதலை பெற்ற பிறகு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

டாக்டர்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவதால், இது அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். குளிர்கால கூட்டத் தொடர், வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News