செய்திகள்
அமித் ஷா

சிவசேனாவின் புதிய கோரிக்கையை ஏற்கமுடியாது - உள்துறை மந்திரி அமித்ஷா

Published On 2019-11-13 15:56 GMT   |   Update On 2019-11-13 15:56 GMT
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்த உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் புதிய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான நாள் முதல் நேற்று வரை 20 நாட்களாக நடந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. இனி கவர்னர் பகத்சிங் கோஷியாரி தலைமையில் மராட்டிய அரசின் நிர்வாகம் நடைபெறும். அவர் தனக்கு உதவியாக சில ஆலோசகர்களை நியமித்துக் கொள்வார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டசபை இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

அடுத்து, போதிய ஆதரவுடன் ஆட்சி அமைக்க யாரும் முன்வந்தால், ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, புதிய அரசு பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் சட்டசபைக்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக உள்துறை மந்திரியும், பாஜக தலைவருமான அமித்ஷா தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் கூறியதாவது:

பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரி ஆவார் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தோம். 

ஆனால் சிவசேனா தற்போது புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டசபை பதவிக்காலம் முடிந்த பின்னரே, கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதற்குமுன் எந்த மாநிலத்திற்கும் ஆட்சி அமைக்க 18 நாட்கள் கொடுக்கப்பட்டதில்லை. தற்போது கூட பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை அணுகலாம். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கபில் சிபில் கூறுவது குழந்தைத்தனமானது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News