செய்திகள்
தற்கொலை

திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தற்கொலை செய்த என்ஜினீயர்

Published On 2019-11-12 03:43 GMT   |   Update On 2019-11-12 03:43 GMT
ஐதராபாத்தில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:

ஐதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியை சேர்ந்தவர், சந்தீப் (வயது 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவருக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் ஐதராபாத் புறநகர் பகுதியான கொம்பள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்து வந்தன. கடந்த சனிக்கிழமை இரவு வரை ஜாலியாக இருந்த சந்தீப், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மணமகன் அறைக்கு தூங்க சென்றார். காலை 7 மணிக்கு அவர் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை உறவினர்கள் தட்டினர். திறக்கவில்லை. உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சந்தீப், அங்கு இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சந்தீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தீப்பின் தாய் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். தந்தை தொழில் அதிபர். இதனால் சந்தீப், தாத்தா வீட்டில் வளர்ந்து வந்தார். இவரது தாத்தா சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் மீது அதிக பாசம் வைத்திருந்த சந்தீப், சோகமாக இருந்துள்ளார். அந்த பிரிவை தாங்காமல் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Tags:    

Similar News