செய்திகள்
ஆளுநருடன் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு

Published On 2019-11-11 14:27 GMT   |   Update On 2019-11-11 14:38 GMT
மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு 2 நாள் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்து விட்டதாக குறிப்பிட்டார்.
மும்பை:

288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன.
 
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்த தடவை முதல்-மந்திரி பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
 
இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சட்டசபை தேர்தலில் அதிக (105) இடங்களை வென்ற கட்சி பா.ஜ.க. என்பதால் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இன்று மாலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டில் 'மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை’ என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற இரண்டாவது கட்சி (56 இடங்கள்) என்ற முறையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவின் விருப்பத்தை அறியவும் அக்கட்சிக்கு உள்ள பிற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தெரிந்துக் கொள்வதற்காகவும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார்.



இன்றிரவு  7.30 மணிக்குள் சிவசேனா தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை கெடு விதித்துள்ளது.

மும்பை பன்ட்ரா பகுதியில் உள்ள தாஜ் லேன்ட்ஸ் ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரும் வந்திருந்தனர்.

சுமார் ஒருமணி நேரம் நடபெற்ற இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க இரு தலைவர்களும் மறுத்து விட்டனர்.

எனினும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைந்தால் கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் சோனியா காந்தி இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

இன்று மாலை 4 மணியளவில் மீண்டும் நடைபெற்ற இரண்டாம்கட்ட ஆலோசனைக்கு பின்னர் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை 6.30 மணியளவில் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதித்யா தாக்கரே, 'ஆட்சி அமைக்க விரும்புவதாக ஆளுநரிடன் நாங்கள் தெரிவித்தோம். இதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டோம்.

ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டார். எனினும், ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களது முயற்சிகள் தொடரும்’ என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News