செய்திகள்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2019-11-10 20:53 GMT   |   Update On 2019-11-10 20:53 GMT
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புதுடெல்லி:

அயோத்தி வழக்கில் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ஏகமனதாக தீர்ப்பு அளித்தனர்.



இதற்கிடையே, அயோத்தி வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, கடந்த சனிக்கிழமையில் இருந்து, மேற்கண்ட 5 நீதிபதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அவர்களது வீடுகளில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களது வீடுகளுக்கு செல்லும் சாலையில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முன்பு வீடுகளில் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, நடமாடும் பாதுகாப்பு குழுக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. நீதிபதிகள் வெளியே செல்லும்போது, அவர்களது காருடன் துப்பாக்கி ஏந்திய வீரர்கள், பாதுகாப்பு வாகனத்தில் உடன் செல்வார்கள்.

இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எந்த நீதிபதிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை“ என்றார்.
Tags:    

Similar News