செய்திகள்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
அயோத்தி நிலம் வழக்கில் திர்ப்பு வழங்க உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளது.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று (சனிக்கிழமை) வெளியிடுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது.
இதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன்படி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தீர்ப்பு தொடர்பான செய்தி சேகரிப்பதற்காக இன்று காலை முதலே உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்புகளில் ஒன்றாகும். இது மத்திய ஆயுத போலீஸ் படைகளில் ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
இன்று தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்ப்டடுள்ளது.