செய்திகள்
மகாராஷ்டிரா முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ். இதற்கான கடிதத்தை ஆளுநரை சந்தித்து அவர் அளித்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.
முதல் மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் இன்று ராஜினாமா செய்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் தனது அமைச்சரவை சகாக்களுடன் மும்பை ராஜ்பவனுக்கு இன்று மாலை சென்றார். அங்கு அவர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அளித்தார்.