செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

அயோத்தி தீர்ப்பு: மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு - மாயாவதி கருத்து

Published On 2019-11-07 23:33 GMT   |   Update On 2019-11-07 23:33 GMT
அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என்று மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ:

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந்தேதி ஓய்வுபெற இருப்பதால் அதற்கு முன்னதாக தீர்ப்பு வெளியாக உள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் மனதில் ஒரு அமைதியற்ற நிலையும், பலவித சந்தேகங்களும் நிலவுகிறது.

மக்கள் அனைவரும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதி கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசியல்சாசனப்படியும், சட்டப்படியும் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. அவர்களின் சொத்து, மதம் மற்றும் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News