கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.
கர்தார்பூர் வழித்தட திறப்புவிழா - காங்கிரஸ் எம்எல்ஏ சித்துவுக்கு மத்திய அரசு அனுமதி
பதிவு: நவம்பர் 07, 2019 21:38
நவ்ஜோத் சிங் சித்து
புதுடெல்லி:
சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வருவதற்கான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இந்தியா -பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகின.
அதன்படி பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 9-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார். இவ்விழாவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன நவ்ஜோத் சிங் சித்துவிற்கு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவ்விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு சித்து இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.