செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அக்டோபர் 31-ம் தேதி முதல் செயல்பட துவங்கியது.
இதையடுத்து, இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு நியமித்தது. சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரீஷ் சந்திர முர்மு துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே. மாத்தூர் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த 31-ம் தேதி துணை நிலை ஆளுநர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு சந்தித்துப் பேசினார்.