செய்திகள்
கர்தார்பூர் குருத்வாராவில் பாகிஸ்தான் கொடி- வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி
கர்தார்பூர் குருத்வாராவின் மாடியில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 9 ஆம் தேதி கர்தார்பூர் குருத்வாராவை துவங்கி வைக்க இருக்கிறார். குருநானக் 550 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கர்தார்பூர் குருத்வாரா துவங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் குருத்வாரா கட்டிடத்தின் மொட்டை மாடியில் பாகிஸ்தான் கொடி வரையப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. சீக்கிய மதத்தவர் கொடிக்கு மாற்றாக கர்தார்பூர் குருத்வாராவின் மாடியில் பாகிஸ்தான் தேசிய கொடி வரையப்பட்டுள்ளதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.
வைரல் புகைப்படங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் அதிகளவு பகிரப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்று கட்டிடத்தின் மேல் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடி பூசப்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கர்தார்பூர் குருத்வாரா புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவற்றை உற்று நோக்கும் போது குருத்வாரா புகைப்படங்களும் வைரல் புகைப்படத்தில் இருக்கும் கட்டிடமும் முற்றிலும் வேறுப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றிருக்கும் கட்டிடம் குருத்வாரா கிடையாது என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.