செய்திகள்
மத்திய ரிசர்வ் படையினர் (கோப்பு படம்)

சத்தீஸ்கர்: நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

Published On 2019-11-07 04:10 GMT   |   Update On 2019-11-07 04:10 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் இன்று நடந்த மோதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்க்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட மாநில தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுகின்றனர்.



இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள தன்குடா-பமீட் பகுதியில்  நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சில நக்சலைட்டுகளும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுவதால் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News