செய்திகள்
சரத் பவார்

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை தவிர்க்க இதுதான் ஒரே வழி -சரத் பவார்

Published On 2019-11-06 07:49 GMT   |   Update On 2019-11-06 07:53 GMT
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும் என சரத் பவார் கூறி உள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அதிகார பகிர்வு விஷயத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலா, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பவில்லை.

இதற்கிடையே பாஜகவின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்த்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. எதிர்க்கட்சியாக நாங்கள் பங்குவகிப்போம். ஜனாதிபதி ஆட்சியை தவிர்ப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. 

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று என்னை சந்தித்தபோது, விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து பேசினோம். ஒத்த கருத்துடைய சில விவகாரங்கள் குறித்தும் பேசினோம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News