செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: வங்கி பணம் கொண்டுசென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 4 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரில் வங்கி பணத்தை கொண்டுசென்ற வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கதுவா:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தின் பஷொலி பகுதியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கி ஊழியர்கள் உள்பட 4 பேர் வங்கிக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் பணத்துடன் பானி பகுதிக்கு இன்று வேனில் வந்து கொண்டிருந்தனர்.
மலைப்பாங்கான பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாடை இழந்த வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வங்கி ஊழியர்கள் உள்பட வேனில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வேன் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் விபத்துக்குள்ளான வேனில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வங்கிக்கு சொந்தமான 2 கோடி ரூபாயையும் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் அது வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.