செய்திகள்
உயிரிழந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டி

பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - தெலுங்கானாவில் பயங்கரம்

Published On 2019-11-04 11:54 GMT   |   Update On 2019-11-04 12:37 GMT
தெலுங்கானாவில் இன்று பட்டப்பகலில் தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மெட் தாசில்தாராக பணிபுரிந்தவர் விஜயா ரெட்டி. இவர் வழக்கம்போல இன்று தனது அலுவலகத்தில் பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது அறைக்கு வந்த ஒரு மர்ம நபர் மறைத்து கொண்டுவந்த பெட்ரோலை திடீரென விஜயா ரெட்டி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத விஜயா ரெட்டி தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் தீயில் எரிந்து கொண்டிருந்த விஜயாவை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



தாசில்தாரை காப்பாற்ற நடந்த முயற்சியில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார். மேலும், விஜயாவுக்கு தீ வைத்த மர்ம நபருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், தாசில்தார் விஜயா பட்டப்பகலில் தனது அலுவலகத்தில் வைத்தே தீயீட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News