செய்திகள்
பெரிய சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வந்த காட்சி

வி.ஐ.பி. தரிசன திட்டத்தில் திருப்பதியில் 10 நாட்களில் 533 பேர் தரிசனம்

Published On 2019-11-01 08:51 GMT   |   Update On 2019-11-01 10:16 GMT
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த 10 நாட்களில் 533 நன்கொடையாளர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
திருமலை:

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் இந்து சனாதன தர்மத்தை பரப்ப நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டது. அதற்காக ஸ்ரீவாணி (வெங்கடேஸ்வரா கோவில் நிர்மாணம்) அறக்கட்டளையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பக்தர்களிடையே அறிமுகப்படுத்த இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்தது.

இதையொட்டி கடந்த 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையான 10 நாளில் 533 நன்கொடையாளர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.

பக்தர்களின் ஆதரவு பெருகியுள்ளதால் தற்போது ஆப்லைனில் வழங்கப்பட்டு வரும் இந்த நன்கொடை சேவை இந்த மாதம் முதல் இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் தரிசன டிக்கெட் மட்டுமல்லாமல் பக்தர்கள் வாடகை அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் 60 வயது நிரம்பிய பின்னரும் அயலாக்கப்பணி மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர். தற்போது படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு, ஓய்வுபெற்ற பின்னும் தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று, ஆந்திர அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

அதில் தேவஸ்தான பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை உடனடியாக பணியை விட்டு அனுப்ப வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News