செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண விளாடிமிர் புதின் வருகிறார்?
தமிழ்நாட்டில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை விளாடிமிர் புதின் நேரில் காண தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தமிழகம் வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டுகளிப்பார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகியுள்ளது. இதே தகவல்களை பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன.
சமூக வலைத்தளங்களில் புதின் வருகை பற்றிய தகவல்கள் வைரலாகும் நிலையில், குஜராத் பத்திரிகை தகவல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் புதின் மதுரையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
இதுதவிர ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் வைரல் பதிவுகள் போலி என தெரிவித்துள்ளது. அந்த வகையில் தமிழர் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கண்டுகளிக்க இருப்பதாக வைரலான தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் விழா மிகவும் சிறப்புமிக்கது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு பின் பல்வேறு போராட்டங்களால் தடை நீக்கப்பட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.