ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்துக்கு இப்போது இடைக்கால ஜாமீன் இல்லை- மருத்துவ அறிக்கை கேட்கிறது டெல்லி ஐகோர்ட்
பதிவு: அக்டோபர் 31, 2019 13:13
ப.சிதம்பரம்
புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இரண்டு வழக்குகளிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிவடைந்ததும், சிதம்பரம் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்காக 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ப.சிதம்பரத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
அதேசமயம், சிதம்பரத்தின் உடல்நிலை மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை அளிக்கும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்துக்கு ஸ்டெரைல் செய்யப்பட்ட அறை ஒதுக்கவேண்டுமா? என மருத்துவக்குழு பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்து சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.