செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக பாஜக-சிவசேனா தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகளின் தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும் மகாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை. பாஜக, சிவசேனா கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
அங்கு மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.
இதனால் கூட்டணி ஆட்சி உடனடியாக அமைந்து பா.ஜ.க. முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிவசேனா கட்சி தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பையாஜி ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகளின் தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.