செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல் மந்திரி பதவியா? - பட்னாவிஸ் புது விளக்கம்

Published On 2019-10-29 10:02 GMT   |   Update On 2019-10-29 10:02 GMT
மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல் மந்திரி பதவியா? என்பதற்கு முதல் மந்திரி பட்னாவிஸ் புது விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி பதவி கேட்டு சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே, வரும் 30-ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
 
288 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 21-ம் தேதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் கட்சிகளான பா.ஜ.க., சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதில் பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

மற்றொரு அணியில் கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் பா.ஜ.க. - சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உடனடியாக கூட்டணி அரசை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா ஆட்சியில் சம பங்கு கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டதால், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான ‘மாதோஸ்ரீ’க்கு நேரில் சென்று பேசினர். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஏற்பட்டது. அப்போதே மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குமான கூட்டணி உடன்பாட்டை அமித்ஷாவுடன் செய்து கொண்டதாக சிவசேனா கூறி வருகிறது.

அதன்படி, சட்டசபை தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் சமபங்கு அளிப்பது பற்றி பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா சொல்கிறது.

சிவசேனா கோரும் ஆட்சியில் சமபங்கு என்பது முதல் மந்திரி பதவியை சுழற்சி அடிப்படையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது மற்றும் மந்திரி பதவிகளை சம அளவில் பகிர்ந்து கொள்வது என்று கூறப்படுகிறது.



இந்த பரபரப்பான நிலையில் கடந்த சனிக்கிழமை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் நடந்தது. இதில், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் முழு அதிகாரத்தை உத்தவ் தாக்கரேக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேயை முதல் மந்திரியாக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

இந்த தேர்தலில் மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்று உள்ளார். சிவசேனா வரலாற்றில் அதன் நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன் முறையாக தேர்தலை சந்தித்தவர் ஆதித்ய தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் பேசப்பட்டதன் அடிப்படையில் ஆட்சியில் சமபங்கு என்ற பார்முலாவை நிறைவேற்றுவது தொடர்பாக பா.ஜ.க. எழுத்துப்பூர்வமாக கடிதம் தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியதாக சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் தெரிவித்தார். சிவசேனாவின் இந்த புதிய நிபந்தனை பா.ஜ.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல் மந்திரி பதவியா? என்பதற்கு முதல் மந்திரி பட்னாவிஸ் புது விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதாக  நாங்கள் உறுதியளிக்கவில்லை.

முதல் மந்திரி பதவி தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News