செய்திகள்
பதுங்கு குழியில் தஞ்சமடைந்த கிராம மக்கள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு - உயிர் பயத்தில் மக்கள் பதுங்கு குழியில் தஞ்சம்

Published On 2019-10-28 15:08 GMT   |   Update On 2019-10-28 15:08 GMT
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலால் அங்குள்ள கிராம மக்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்தனர்.
ஜம்மு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2100-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட நவ்ஷேரா எல்லைக்கோடு பகுதியில் இந்தியர்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் இன்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறிய வகையில் தாக்குதல் நடத்தினர்.

எல்லைப்பகுதியில் உள்ள இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்ற நிலையில் இருதரப்பு துப்பாக்கிச் சண்டையால் பீதியடைந்த உயிர் பயத்தில் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.
Tags:    

Similar News