செய்திகள்
அதிதீவிர புயலாக மாறியது கியார்- மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியிருப்பதால், மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை:
அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியிருப்பதாகவும், மேற்கு-வடமேற்கு நோக்கி மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர புயலாக வலுவடைந்திருப்பதால், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரையில் பலத்த காற்று வீசும் என்றும், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டமான சிந்துதுர்க் மாவட்டத்தில் இன்று அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 204.5 மிமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு உள்ளது.
மேலும் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 5 நாட்களில் ‘கியார்’ புயல் மேற்கு-வடமேற்கு திசைகளில் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.