செய்திகள்
கியார் புயல்

அரபிக்கடலில் கியார் புயல்- கர்நாடகம், மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2019-10-25 08:55 GMT   |   Update On 2019-10-25 08:55 GMT
அரபிக்கடலில் உருவான கியார் புயல் ஓமன் நோக்கி நகரும் என்றும், இந்த புயல் காரணமாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதுடெல்லி:
 
அரபிக் கடலில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாயது. இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது நாளை மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. பின்னர் மேலும் வடமேற்கு நோக்கி நகரும் கியார் புயல், ஓமனை நோக்கி நகருவதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கியார் புயல் காரணமாக கர்நாடக கடலோர மாவட்டங்கள், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு கொங்கன் பகுதியில் நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கொங்கன் பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கிழக்கு மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். நாளை வரை மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரைகளில் 20 அடி முதல் 30 அடி வரை கடல் அலைகள் எழும் என்றும், வடக்கு கர்நாடக கடற்கரை பகுதிகளில் 8 முதல் 20 அடி வரை அலை எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News