செய்திகள்
கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புதுடெல்லி:
கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு, இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திகார் சிறையில் டி.கே.சிவக்குமாரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.