செய்திகள்
எல்லையில் துப்பாக்கிச் சூடு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - இந்திய ராணுவ அதிகாரி தகவல்

Published On 2019-10-23 08:58 GMT   |   Update On 2019-10-23 08:58 GMT
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

காஷ்மீர் எல்லையில் கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவமும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளும் இந்த அட்டகாசத்தை இணைந்து செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 20-ந்தேதி அதிகாலை இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் 4 பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளும் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது. தங்கள் தரப்பில் யாரும் பலியாக வில்லை என்றும் கூறியது.

இந்தநிலையில் இந்திய ராணுவத்தின் தாக்குதல் பற்றி ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர், 20-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 16 பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்தனர் என்று கூறி உள்ளார்.

பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கும் அழிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சுமார் 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News