செய்திகள்
கம்லேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரி கொலைவழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பயங்கரவாத தடுப்பு முகமை இன்று கைது செய்துள்ளது.
புனே:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
இதற்கிடையே, லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் கடந்த 18-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கம்லேஷ் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வைத்து பயங்கரவாத தடுப்பு முகமை இன்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்காக போலீசார் உத்தர பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.