செய்திகள்
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்

பீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்

Published On 2019-10-20 13:20 GMT   |   Update On 2019-10-20 14:46 GMT
பீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையே,  ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர். மேலும், பயங்கரவாதிகளின் முகாம்களை பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி அழித்தது.

இதை இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து பிபின் ராவத் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன.

இதில் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டது. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்’’ என்றார்.
Tags:    

Similar News