செய்திகள்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா- மகாராஷ்டிராவில் பாஜக மந்திரி உறவினர் மீது வழக்குப்பதிவு
மகாராஷ்டிராவில் தேர்தலை முன்னிட்டு வாக்களர்களுக்கு பணம் கொடுத்த பாஜக மந்திரியின் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நாக்பூர்:
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைத்து உள்ளன. பா.ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 123 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், சகோலி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிரா மந்திரியின் உறவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து சுமார் ரூ.18 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், மகாராஷ்டிர மாநில பொதுப்பணித்துறை மந்திரி பரினாய் பியூக், சகோலி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
சகோலி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதே தொகுதியில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி நானா படேல் நேற்று இரவு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பரினாய் பியூக்கின் உறவினரான நிதின் பியூக் சகோலி பகுதியில் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 17 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவித்தனர்.