செய்திகள்
பழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை
ஆப்பிள், மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்ட வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு சத்தீஸ்கர் அரசு தடை விதித்துள்ளது.
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, பழங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து ஆணை பிறப்பித்தது. இதுகுறித்து, அந்தத்துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வியாபாரிகள் விற்பனை செய்யும் ஆப்பிள், மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம் மற்றும் சில பழங்களில், ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். இவை பழங்களில் விஷத்தன்மையை ஏற்படுத்துகிறது. அதை வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்களின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே பழங்களில் ஸ்டிக்கர் ஒட்ட வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களின் மீது, சுகாதாரமற்ற உணவை விற்ற குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்” என்று எச்சரித்தார்.
மேலும் பழங்களை விரைவாக பழுக்க வைக்க ரசாயன பொருட்களான மெழுகு, கனிம எண்ணெய் போன்ற சிலவற்றையும் பழங்களில் பூசுவதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.