செய்திகள்
5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் அயோத்தி
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரம் தீபாவளியையொட்டி சுமார் 5.5 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி தீபோத்சவம் நிகழ்ச்சி மூலம் மீண்டும் கின்னஸ் சாதனை படைக்க உள்ளது.
லக்னோ:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்த ஆண்டுக்கான தீபஉற்சவம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறும் தீபஉற்சவம் நிகழ்ச்சியில் சரயு நதிக்கரையில் அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது.
கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற தீபஉற்சவ நிகழ்ச்சியில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் 45 நிமிடங்கள் அனையாமல் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டு நடைபெற்ற தீபஉற்சவ நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 5.50 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 24 முதல் 27-ம் தேதிவரை அயோத்தி நகரின் சரயு நதியின் கரையோரம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும் அகல் விளக்குகளை ஒளிரவிட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் தீபாவளியின் போது கின்னஸ் சாதனை மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க மாநிலமே ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.