செய்திகள்
டிடிவி தினகரன்

டி.டி.வி. தினகரன் கட்சிக்கு தனி சின்னம் கிடைக்குமா? - தேர்தல் ஆணையம் விசாரணை

Published On 2019-10-17 08:34 GMT   |   Update On 2019-10-17 08:34 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வது குறித்தும், தனி சின்னம், தனி கொடி வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்யப்படும் என்று பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்தார்.

அதன்படி அவர் தலைமை தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்து தனி சின்னம் அளிக்கும்படி கோரிக்கை விடுத்து இருந்தார்.

தினகரனின் இந்த மனு தொடர்பான விசாரணை இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது. இதில் தினகரன் தரப்பு சார்பில் வக்கீல் செந்தூர்பாண்டியன் ஆஜரானார்.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வது குறித்தும், தனி சின்னம், தனி கொடி வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதன் முடிவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தனி கொடி, சின்னம் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலா தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

பின்னர் விசாரணை நடத்தி இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தினகரன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News