செய்திகள்
போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள்

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை

Published On 2019-10-16 17:19 GMT   |   Update On 2019-10-16 17:19 GMT
காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியை பேணுவோம் என உத்தரவாதம் அளித்ததையடுத்து கைது செய்யப்பட்ட பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

மேலும், காஷ்மீர் பகுதி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், காஷ்மீரில் 72 நாட்களுக்கு பிறகு முடக்கப்பட்ட தொலைபேசி நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. 

ஸ்ரீநகரின் பிரதாப் பூங்கா அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா மகள் சபியா உள்பட 13 பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் உள்பட அனைவரையும் கைது செய்து, ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவின் மகள் சபியா மற்றும் சகோதரி சுரையா உள்பட 13 பெண்களையும் ஜாமீனில் விடுவித்து தலைமை மாஜிஸ்திரேட் இன்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும், அவர்கள் அனைவரும் ஜாமீனுக்கான பிணை தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கியும், இனிமேல் அமைதியை சீர்குலைக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என உத்தரவாதம் அளித்ததையடுத்து அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News