செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - சத்தீஸ்கர் தொழிலாளியை சுட்டுக் கொன்று பயங்கரவாதிகள் அட்டூழியம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அருகிலுள்ள கக்போரா பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று அந்த பகுதிக்கு வந்த பயங்கரவாதிகள் அங்கு பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளியை நோக்கி குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த தாக்குதலில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தால், காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சமீப காலமாக, வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.