செய்திகள்
திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிபிஐ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை தொடந்து தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து இன்று காலை திகார் சிறைச்சாலைக்கு அமலாக்கத்துறையின் 3 அதிகாரிகள் சென்றனர். அங்கு ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தினர்.
ப.சிதம்பரத்திடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் நிலையில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி ஆகியோர் சிறைக்கு வந்திருந்தனர்.