செய்திகள்
டி.கே.சிவக்குமார்

டிகே சிவக்குமாரின் நீதிமன்ற காவல் 25-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2019-10-16 02:01 GMT   |   Update On 2019-10-16 02:01 GMT
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவலை வருகிற 25-ந் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு :

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை யினர் கடந்த மாதம்(செப்டம்பர்) 3-ந் தேதி கைது செய்தனர். அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி திகார் சிறையில் வைத்து டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து டி.கே.சிவக்குமார் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனு மீது நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து டி.கே.சிவக்குமாரை டெல்லி திகார் சிறை போலீஸ் அதிகாரிகள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர் படுத்தினர்.

அப்போது டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘சிறையில் டி.கே.சிவக்குமாரை நிற்க வைத்து அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அவருக்கு முதுகுவலி உள்ளது. அவ்வாறு இருந்தும் அவருக்கு உட்கார ஒரு நாற்காலி கூட வழங்கவில்லை. அதே போல் அருகில் உள்ள நூலகத்திலும் உட்கார நாற்காலி இல்லை. எனவே, டி.கே.சிவக்குமாருக்கு உட்கார நாற்காலி வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.

அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமாரை வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார். டி.கே.சிவக்குமாரை ஆஜர்படுத்த வரும்போதும், சிறைக்கு அழைத்து செல்லும்போதும், அவருடன் கைகுலுக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர். அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Tags:    

Similar News