செய்திகள்
ஒபியம் செடிகள்

ஒபியம் கலந்த தேநீரை பருகிய 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2019-10-15 11:20 GMT   |   Update On 2019-10-15 11:20 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒபியம் கலந்த தேநீர் பருகிய 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர்:
 
இந்திய அரசு ஒபியம் போதை மருந்து செடிகளை வளர்க்கலாம் என விவசாயிகளுக்கு லைசென்ஸ் அளித்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வளர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வளர்த்துக்கொள்ள சட்டரீதியாக அனுமதி தந்துள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இதை அவ்வப்போது மேற்பார்வையிடுவார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பாபா மோகன்தாஸ் விழாவில் பங்கேற்க அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து பல்வேறு மக்கள் வருகை தருவது வழக்கம்.

நேற்று இரவு நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்தவர்களில் 14 பேர் அங்குள்ள ஒரு தேநீர் விடுதியில் தேநீர் அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கம் அடைந்தனர். இதனால் பதற்றம் அடைந்த மக்கள் அவர்களை அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் அருந்திய தேநீரில் ஒபியம் கலந்திருந்ததால் மயக்கம் அடைந்துள்ளனர் என அங்குள்ள மருத்துவர் தெரிவித்தார். மேலும் 8 பேர் நிலைமை மோசமாக உள்ளது அவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அவர்கள் அருந்திய தேநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒபியம், மருத்துவ பயன்பாடு உள்ள ஒரு செடியாகும். இது வலிநிவாரணி தயாரிக்க பயன்படுகின்றது, ஆனால் அனுமதி இல்லாமல்  ஒபியம் பயிரிடுவது சட்ட விரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News