செய்திகள்
சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்

மோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா?

Published On 2019-10-14 04:14 GMT   |   Update On 2019-10-14 04:14 GMT
மாமல்லபுரம் கடற்கரையில் மோடி துப்புரவு பணி மேற்கொண்டதை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படத்தின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபருடனான சந்திப்புக்கு மத்தியில் கோவளம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மோடி, அங்கிருந்த குப்பைகளையும் அகற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது. மோடியின் இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. 



காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எம்.பி. கார்த்தி சிதம்பரம் மாமல்லபுரம் கடற்கரையில் மோடி குப்பைகளை அகற்றிய புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதோடு திரைப்பட பாணியில் அது படமாக்கப்பட்டது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவை ஏராளமானோர் ரீடுவிட் செய்திருந்தனர்.

அவர் பதிவிட்ட புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. வைரலாகும் அந்த புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதன்மூலம் வைரலாகும் புகைப்படம் மாமல்லபுரத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகியுள்ளது.



இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். 

போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News