செய்திகள்
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்யம் அல்ல, நாதுராம் ராஜ்யம் - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

Published On 2019-10-10 20:27 GMT   |   Update On 2019-10-10 20:27 GMT
உத்தரபிரதேசத்தில் ராம ராஜ்யமா நடக்கிறது? நாதுராம் (கோட்சே) ராஜ்யம் நடப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
ஜான்சி:

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூபேந்திர யாதவ் என்ற வாலிபர் போலீஸ் என்கவுண்ட்டரில் பலியானார். அவர் சட்டவிரோத மணல் குவாரி நடத்தி வந்ததாகவும், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், பூபேந்திர யாதவின் குடும்பத்தினரோ, லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக, அவரை போலீசார் திட்டமிட்டு கொன்று விட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், பலியான வாலிபரின் வீட்டுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

போலீசார் கூறுவதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. உத்தரபிரதேசத்தில் ராம ராஜ்யமா நடக்கிறது? நாதுராம் (கோட்சே) ராஜ்யம்தான் நடக்கிறது. கும்பல் கொலைகள் போல், போலீஸ் கொலைகளும் ஆரம்பித்து இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News