செய்திகள்
டென்மார்க் பருவநிலை மாற்றம் மாநாடு: அனுமதி மறுப்பால் வீடியோ கான்பரன்சில் பங்கேற்கிறார் கெஜ்ரிவால்
டென்மார்க்கில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.
புதுடெல்லி:
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சி-40 பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல இருந்தார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட சில கட்டுப்பாட்டுகளால் 25 சதவீதம் அளவுக்கு காற்று மாசுபாடு குறைந்துள்ளது.
இதையொட்டி, மாசு அளவை குறைப்பது மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பற்றி பருவநிலை மாற்றம் மாநாட்டில் கெஜ்ரிவால் பேச இருந்தார். மேலும், மாநாட்டிற்கு செல்லும் 8 பேர் கொண்ட குழுவிற்கு கெஜ்ரிவால் தலைமை தாங்குவதாகவும் இருந்தது.
இதற்கிடையே, கெஜ்ரிவால் டென்மார்க் செல்வதற்கான அரசுத்தரப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டென்மார்க்கில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.