செய்திகள்
மகாராஷ்டிரா: துர்கா சிலை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி?
மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா சிலையை கரைக்கும் போது ஆற்றில் ழூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மும்பை:
துர்கா பூஜையையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்து துர்கா சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. நவராத்திரி விழா நிறைவில், அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் டிட்வாலா நகரில் வசுந்தரி பகுதியில் ஒரு துர்கா சிலை வைக்கப்பட்டிருந்தது. நவராத்திரி விழா நிறைவடைந்ததை அடுத்து சிலையை கரைப்பதற்காக இளைஞர்கள் சிலர் அருகில் உள்ள களு என்ற ஆற்றுக்கு கொண்டு சென்றனர்.
சிலையை கரைப்பதற்காக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரின் வேகத்தில் சிக்கி 4 இளைஞர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தற்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இளைஞர்கள் 4 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.