செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் தலைவர்கள் விடுதலை
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள், கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர், பள்ளி, கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டன. மேலும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரபியாபாத் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் யவார் மிர், தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் நூர் முகமது, தெற்கு காஷ்மீர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, மாவட்ட கட்சி தலைவர் சோயப் லோன் ஆகியோர் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியான பிரச்சனைகளை தூண்டாமல் இருப்பது, நன்னடத்தை உள்பட சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.