செய்திகள்
வயநாட்டுக்கு 4-ந்தேதி ராகுல் காந்தி வருகை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 4-ந்தேதி வயநாடு செல்கிறார். அங்கு தொகுதி மக்களை சந்தித்து பேசுகிறார்.
திருவனந்தபுரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அடிக்கடி வயநாடு சென்று தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் வயநாடு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.
இந்த நிலையில் வயநாடு பகுதியில் பந்திபூர் சரணாலய தேசிய நெடுஞ்சாலையை இரவு நேரத்திலும் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.
இது பற்றி ராகுல்காந்தி கேரள முதல்-மந்திரியை சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து மனு கொடுத்தார். மேலும் அவர், தொகுதி மக்களை சந்திக்க வருகிற 4-ந்தேதி வயநாடு வருகிறார். இதனை ராகுல்காந்தியே தெரிவித்துள்ளார்.