செய்திகள்
வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 கோடி திருட்டு - வங்கி மேலாளர் கைது
உத்தர பிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.13 கோடி திருடப்பட்ட வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஸியாபாத்:
உத்தர பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாயீப் கான். விவசாயியான இவர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், தஸ்னா கிளையில் கணக்கு வைத்திருந்தார். இவர் தனது விவசாயம் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த 1 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தியிருந்தார்.
இதற்கிடையே, இவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.13 கோடி பணம் மாயமானதாக கடந்த ஜூலை மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பணத்தை திருடியதாக மேற்கு டெல்லியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் திலக் நகர் கிளை மேலாளர் உள்பட 3 பேரை காவல்துறை நேற்று கைது செய்தது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தாயீப் கான் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் இரண்டு வருடமாக சேவையில் இல்லை. சுராஜ் மற்றும் சுனில் திவாரி என்ற இருவர் இந்த அலைபேசி எண்ணை மீண்டும் செயல்படுத்தியுள்ளனர். பின்பு போலி ஏ.டி.எம் காடுகள் தயாரித்து அதன் மூலம் பணத்தை எடுத்துள்ளனர். இதில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது. பணத்தை எடுத்த பின்னர் அவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் திலக் நகர் கிளை மேலாளர் பிரதிபா ஜேன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டபோது இவர் தஸ்னா கிளை மேலாளராக இருந்தார் என தெரிவித்தனர்.